சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாமா??



நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாமா??

“எனக்கு சக்கரை வியாதி
கூடி விட்டது
நீ தந்த முத்தங்களால்!”- இந்த கவிதையை எங்கேயோ படித்த ஞாபகம்..
எனக்கு தெரிந்தவரை காதலியின் முத்தத்தால் சர்க்கரை கூடுமா? இல்லையா என்று தெரியாது.ஆனால் மனைவியின் திட்டமிடாத  சமையலால் கண்டிப்பாகக் கூடும்.
இதே போல் இன்னொரு சம்பவம் எனது மருத்துவமனையில் நடந்தது.
நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் அவர். என்னிடம் தான் அடிக்கடி வந்து செக்கப் செய்துக் கொள்வார்.
“மேடம்..இந்த நாக்கு இருக்கே..அது செத்துப்போய் கிட்டத்தட்ட 35 வருசம் ஆயிடுச்சு”
ஏன் சார்..என்னாச்சு..?
“சாப்பாடுன்னாவே எனக்கு பிடிக்க மாட்டீங்குது.. மேடம்..ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகி 35 வருசம் ஆகுது.”
இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு  சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
உண்மையில் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நமது மனைவியே நமக்கு சர்க்கரை நோயை அன்பு பரிசாகத்; தருகிறாள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதற்காக உங்கள் மனைவியை கோபித்து பயனில்லை…உணவை பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் படித்தவர்களுக்கே இல்லை என்பதுதான் உண்மை.
எண்ணெய் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பதில்லை. ஆனால் இந்த எண்ணைய்க்கு கொடூராமான இன்னொரு முகமிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரியாணி சமைத்த பாத்திரத்தையே எவ்வளவு கஸ்டப்பட்டு,எல்லாரையும் திட்டி தீர்த்து கழுவுறோம்..அப்பவும் அந்த எண்ணெய் பசை போவதில்லை..அப்படியென்றால் நம் உடம்பிற்குள் போன எண்ணெய் பசையை எப்படி தேய்த்துக் கழுவுவது? யோசிக்கறீர்களா?
“ஆயிலை குறைத்தால் நம் ஆயுள் கூடும்” என்பது தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
சரி.. என்ன டாக்டர் சாப்பிடலாம் ன்னு தானே கேக்கறீங்க?...
கண்டிப்பா அதையும் நான் தானே சொல்லியாகணும்…சொல்றேன்..தற்போதைய வாழ்க்கை முறைக்கேற்ற(உடலுழைப்பின்றி வாழ்வது) உணவை நாம் கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஏனென்றால்; இப்Nபுhது சாப்பிடுகின்ற உணவையே நாமும் தொடர்ந்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சர்க்கரை வாழும் கூடாரமாக நம் உடல் மாறிவிடும்.ஆகவே கீழ்கண்ட உணவு முறைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவோம்..நமது குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துவோம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

காய்கறிகள்
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குறைந்த கலோரியில் அதிக சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் காய்கறிகளுக்கு உண்டு. காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக வைட்டமின் சி, கால்சியம், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம், காய்கறிகளில் உள்ளதால் அவை உடலுக்கு வலுவைத் தரக்கூடியவை.
சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் தினமும் அதிகபட்சம் 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும். காய்களில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. உணவு இடைவேளைகளில் பசியெடுத்தால் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். தோல் நீக்காமல் நன்கு நீரில் சுத்தம் செய்து அவைகளை சாப்பிட்டால் அவற்றின் ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்
கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம். காய்கறிகளில் காரட், பீட்ரூட், பட்டாணி, ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. நன்கு கடைந்த மோரில் நீர் பெருக்கி அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். மிளகு ரசம் மிகவும் நல்லது.
வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய் இவைகளை சாலட்டாக சாப்பிடலாம்.
நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்
சாத்துக்குடி        1
ஆரஞ்சு                2
ஆப்பிள் (தோலுடன்) 1
கொய்யா (சிறியது)  2
பேரிக்காய் (சிறியது) 2
வெள்ளரிக்காய்           2
அன்னாசிப்பழம     4 வளையங்கள்
தர்பூசணி         1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.
சாப்பி;டக்கூடாத பழங்கள்
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், இந்த பழங்களில் மாவுச்சத்தும், கலோரியும், சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம் என்பதால், சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


பழங்களிலுள்ள நார்சத்தின் பயன்கள்
நார்ச்சத்து சர்க்கரை விரைவாக உயர்வதை தடுக்கிறது
மலச்சிக்கலை தடுக்கிறது
பசியை கட்டுப்படுத்துகிறது
வயிறு நிறைவு ஏற்படுகிறது
மலச்சிக்கலும் வாழைப்பழமும்:
வாழைப்பழம்  மலச்சிக்கலுக்கு நல்லது என்று பலர் சாப்பிடுகின்றனர்.ஆனால் இதில் மாவுச்சத்தும் சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம்.அதற்கு பதில் பப்பாளி மற்றும் கொய்யாப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கலை தடுக்கும்,நார் சத்தும் அதிகம்.
அசைவ உணவு பிரியர்களுக்கு
முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடுவது நல்லது. அதுபோல் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் மூலம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக கிடைக்கிறது. இது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் இருமுறை 100 முதல் 200 கிராம் வரை மீன் சாப்பிடலாம். அசைவ உணவில் ஆட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி இவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் வகைகள்
உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். ஆனால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் வகையில் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரையுள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?
குடிக்கக் கூடாது.காரணம் சர்க்கரையை உயர்த்தும் திறன் ஜூஸ்க்கு அதிகம்.நார்சத்து இல்லை.அதிலுள்ள வைட்டமின்கள் வீணாக்கப்படுகின்றன.


உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.
வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு     200 மி.லி.
வாழைத்தண்டு சூப்   200 மி.லி.
அருகம்புல் சூப்     200 மி.லி.
நெல்லிக்காய் சாறு   100 மி.லி
கொத்தமல்லி சூப்   100 மி.லி.
கறிவேப்பிலை சூப்   100 மி.லி.
இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment